நள்ளிரவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கல்வீச்சு...!
கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் மீது மர்மநபர் கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.
கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் மீது மர்மநபர் கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணியின் வீடு, கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டின் மீது இரண்டு கற்கள் வீசப்பட்டுள்ளன. இதில் அமைச்சரின் வீட்டு ஜன்னல் கதவு கண்ணாடி சேதமடைந்தது.
இதனையடுத்து பாதுகாப்பில் இருந்த காவலர்கள் கல்வீசிய நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாலக்காட்டை சேர்ந்த சிவதாஸ் என்ற நபர் குடிபோதையில் இதை செய்தது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அமைச்சர் வீடு மட்டுமின்றி அருகில் இருந்த ஏடிஎம் மீதும் கல்வீச்சி அதன் கண்ணாடிகளை உடைத்துள்ளதும் தெரியவந்தது.