கேரள அரசு வழங்கும் தண்ணீரை தேவையில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். மேலும் கேரள அரசு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தர முன்வந்ததற்கு தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். 

கேரள அரசு தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர வழங்குவதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து, கேரள அரசின் உதவியை ஏற்க தமிழக முதலமைச்சர் அலுவலகம் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரள அரசு தண்ணீர் தர முன்வந்ததற்கு தமிழக மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

கேரளா தருவதாக கூறிய 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையையே இங்கேயே சமாளித்து வருகிறோம். கேரள அரசு தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை அனுப்பினால் உதவியாக இருக்கும் என தெரிவித்தோம். 

இருப்பினும், தமிழகத்திற்கு தண்ணீர் தேவைப்படின் கேரள அரசின் உதவி நாடப்படும். கேரள அரசு தர முன்வந்த தண்ணீரை தமிழக முதல்வர் மறுத்ததாக வரும் தகவலில் உண்மையில்லை. 

நாளை நடைபெறவுள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதல்வர் இது குறித்து முக்கிய முடிவு எடுப்பார்' என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார்.