தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் தலைவிரித்தாடிய கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அந்த தேதியில் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை அபாரதமின்றி செலுத்த ஜூன் 15ம் தேதி வரை மின் வாரியம் கால அவகாசம் வழங்கியது. இதற்கிடையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வந்ததால் மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து வீடுகளில் மின் பயன்பாடு குறித்து கணக்கெடுப்பு நடத்தவில்லை. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதற்கு பதிலாக 2019ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டணம் அல்லது கடந்த மார்ச் மாதம் செலுத்தப்பட்ட கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2019ம் ஆண்டிற்கான மே மாத கட்டணமே நடப்பு மாத கட்டணமாக பதிவேற்றப்பட்டிருந்தது. அந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மே மாதத்திற்கு முந்தைய மாத மின் கட்டணத்தை அதாவது ஏப்ரல் மாதம் கட்டியதை செலுத்தலாம். அல்லது வீடுகளில் உள்ள மின் மீட்டரில் பதிவாகி இருக்கும் மின்பதிவு அளவீட்டை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அதை மின் அலுவலகத்திற்கு சென்று காண்பித்தால் அதை கணக்கீடு செய்து தொகையை செலுத்தி கொள்ளலாம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2 ஆப்ஷன்களை வழங்கியிருந்தார். 

தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இனி மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், ஏற்கனவே போதுமான அளவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கொரோனா 2வது அலை கணிசமாக கட்டுக்குள் வந்ததை அடுத்து மின் கட்டணத்தை கணக்கிடுவதில் இனி மின்வாரியத்திற்கு எவ்வித தடையும் இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.