minister sellur raju speake about staline

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு மற்றும் நிர்வாகம் எப்படி இருந்தது ? என மக்களுக்குத் தெரியும் என்றும், தற்போது அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவிப் பித்து பிடித்துப் போய் அலைகிறார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

தமிழக அமைச்சர்கள் தங்கள் தொகுதியில், துாய்மை இந்தியா திட்டத்தின்கீழ் துாய்மைப்பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவையில், தொகுதி அமைச்சரான செல்லுார் ராஜூ துாய்மைப்பணியை துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த ஆட்சியை ஏன் கலைக்கவில்லை என மக்கள் தன் மீது கோபப்படுவதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இன்று மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். விவசாயம் சிறப்பாக நடக்கிறது. மக்கள் ஒத்துழைப்புடன் ஆட்சி நடக்கிறது.

மிகச் சிறப்பாக நடக்கும் இந்த ஆட்சியை ஏன் கலைக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஸ்டாலினுக்கு பதவி பித்து பிடித்துள்ளதால் தான் இப்படி பிதற்றுகிறார் என தெரிவித்தார்.

தி.மு.க., ஆட்சியில் என்ன செய்தார்கள். சட்டம் ஒழுங்கு, ஆட்சி நிர்வாகம் சரியாக நடந்ததா? நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தது. பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர் என குறை கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு தற்போது மிகச் சிறப்பான ஆட்சி நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.