திமுகவில் மீண்டும் 'வாரிசு' அரசியல்.. சர்ச்சையை கிளப்பும் அமைச்சரின் மகன் !!
வரப்போகிற செஞ்சி பேரூராட்சி மன்றத் தேர்தலில் அமைச்சர் மஸ்தான் மகன் மொக்தியார் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திமுகவில் மீண்டும் ஒரு வாரிசு அரசியலா ? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளின் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் மனுக்கள் வாங்க தொடங்கப்பட்டது. செஞ்சி பேரூராட்சியில் நேற்று முதல் மனுத்தாக்கல் தொடங்கியது. செஞ்சி பேரூராட்சி தேர்தல் அலுவலராக பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
18 வார்டுகளை கொண்ட செஞ்சி பேரூராட்சியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 23,939 ஆகும். இதில் ஆண்கள் 11,497. பெண்கள் 12422 மற்றும் திருநங்கைகள் 20 பேர் ஆகும், செஞ்சி பேரூராட்சி தொடர்ந்து பொது பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனந்தபுரம் பேரூராட்சியில் பேரூராட்சி தேர்தல் அலுவலராக அதே பேரூராட்சி செயல் அலுவலர் மலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று அங்கும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 15 வார்டுகளை கொண்ட அனந்தபுரம் பேரூராட்சியில் மொத்த வாக்காளர்கள் 5 ஆயிரத்து 380 இதில் ஆண்கள் 2,654 பெண்கள் 2,726 ஆகும். அனந்தபுரம் பேரூராட்சி தற்போது ஆதிதிராவிடர் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தற்போதைய அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் மஸ்தான் போட்டியிட உள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. வாரிசு அரசியல் என்ற பிம்பம் இன்றளவும் திமுக மேல் வைக்கப்பட்டு வருகிறது. அதனை மீண்டும் உறுதி செய்யும் விதத்தில் அமைச்சர் மஸ்தான் மகன் போட்டியிடுகிறார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார் அமைச்சர் மஸ்தான். நகர்புற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுக தொண்டர்களிடம் நேர்காணல் நடத்திய போது, அவருடைய மகன் மற்றும் மனைவியையும் நேர்காணல் செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. தற்போது தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் உள்ள மொக்தியார் மஸ்தான், உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுவதால், அவர் தான் செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் என்று கூறுகின்றனர்.
7வது வார்டில் அவர் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பே தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டு, படுஜோராக தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர் என்றும் கூறுகின்றனர் அப்பகுதி திமுகவினர். திமுகவில் மீண்டும் வாரிசு அரசியல் சர்ச்சை எழுந்து இருக்கிறது.