Minister Jayakumar Pressmeet in Chennai Airport
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கின்றனர் என்பது அந்த மாநில அரசியல் என்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் கட்சி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மாநில நீர்வளத்துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெறகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி புறப்பட்டார். டெல்லி புறப்படும முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைத்தால் தமிழகத்துக்கு இடைக்காலத்தில் கிடைக்க வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து விடும் என்றார்.
கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்துக்கு காவிரி நீர் வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் முக்கிய நோக்கம். கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கின்றனர் என்பது அந்த மாநில அரசியல். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் கட்சி, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் அதிமுகதான் சாம்பியன். அதிமுக முன்பு எந்த ஜூனியர்சும் நிலைக்கப்போவதில்லை. அதிமுகவில் எல்லோருமே சீனியர் சாம்பியன்ஸ் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
