GST என்ற பெயரில் அதிக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை!!
ஜிஎஸ்டி வரி மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதபடி செயல்படுத்தப்படுகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதை கொள்கையளவில் முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடியுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜிஎஸ்டி வரியை பொருத்தவரை சிலர் குழப்பி கொண்டே இருக்கிறார்கள். இதில் வணிகர்கள், உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோருக்கு மட்டும் இந்த வரி விதிப்பு அளிக்கப்படுவதாக கூறுகிறார்கள். இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
ரூ.20 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படும். அதற்கு குறைவாக வருமானம் இருந்தால், அவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
உணவு பொருட்களுக்கு வரி கிடையாது. ஜிஎஸ்டி என்ற பெயரை வைத்து சிலர், அதிகமாக பணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது. இதுபோன்று உணவு பொருட்களுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. அதற்கும் அதிகமாக வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக சிறப்பு புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் புகார் செய்யலாம். தமிழக அரசிடமும் புகார் செய்யலாம். இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே வரி விதிப்பு மூலம் மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பீட்டுக்கு மத்திய அரசு, நிவாரணம் வழங்க வேண்டும். இதுபோல் ரூ.3000 கோடி தமிழகத்துக்கு தரவேண்டிய இழப்பீட்டை மத்திய அரசு கொடுக்கவில்லை.
ஜிஎஸ்டி மசோதா குறித்த சாதக, பாதகங்களை நாடாளுமன்றத்தில் அனைத்து எம்பிக்களும் பேசி, அதை பற்றி அறிந்த பின்னரே, மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையிலும், ஜிஎஸ்டி மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.