"மக்கள் அஞ்ச வேண்டாம்" - ஆறுதல் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார்...!
டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வெகுவாக பரவி வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக பேட்டியளித்தார்.
இதையடுத்து, இன்று காலை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
இதைதொடர்ந்து தமது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் 7000-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் எனவும் தெரிவித்தார்.