"மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதா?" - ராஜேந்திர பாலாஜிக்கு வக்கீல் நோட்டீஸ்
பாலில் கலப்படம் இருப்பதாக கூறி மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதா என கூறி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வழக்கறிஞர் நோட்டிஸ்அனுப்பியுள்ளது.
கடந்த மே மாதம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில்ரசாயனம் கலப்படம் செய்வதாகவும், இதனால் குழந்தைகளுக்கு கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாகும் எனவும் கூறி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பினார்.
இதற்கு மக்கள் மத்தியில் வீண் பீதியை கிளப்புவதாக பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
ஆனால் பொன்னுசாமி பால் முகவர் சங்கத்தை சேர்ந்தவரே இல்லை எனவும் அவர்களின் சங்கம் ஒரு டூப்ளிகெட் சங்கம் எனவும் விமர்சனம் செய்தார் ராஜேந்திர பாலாஜி.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் இந்த கடும் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதில், ராஜேந்திர பாலாஜியின் விசமத்தனமான பேச்சின் காரணமாக சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி, மாநில பொதுச்செயலாளர் கே.எம்.கமாலுதீன், மாநில பொருளாளர் எஸ்.பொன்மாரியப்பன் ஆகியோர் உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், சங்கத்தின் உறுப்பினர்கள், பால் முகவர்கள் என அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினைப் பற்றியும், மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்கள் குறித்தும் மிகவும் அவதூறாகவும், விஷமத்தனமாகவும் பேசிய கருத்துக்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு வார காலத்திற்குள் திரும்ப பெற வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கினை தாக்கல் செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கறிஞர் நோட்டிஸ் நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பால் முகவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.