TN Metro rail project: மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும்.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.!
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக மெட்ரோ ரயில் இணைப்பை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. ஆளுநர் சிறப்புரையுடன் நேற்று தொடங்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக, விசிக கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று சட்டப் பேரவையில் நடக்கும் கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிப்பது தொடர்பாக, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்;- வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக மெட்ரோ ரயில் இணைப்பை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதனைக் கருதி இந்தத் தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் பன்னாட்டு நிறுவனத்தின் மூலமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான இறுதித் திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் தற்போது இருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பணிகளைக் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.