கொரோனா பரவல் குறையாத மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வு அளிக்க வேண்டாம் என மருத்துவ வல்லுநர்கள் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 24ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தீவிரமாக உள்ள 11 மாவட்டங்களிலும் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த 11 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன்14ம் தேதியில் இருந்து 21ம் தேதி வரை 4வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 5வது முறையாக முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு சில மாவட்டங்கள் கொரோனா தொற்று குறையாததால் ஜூன் 28ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அதே சமயத்தில் பயணிகள் அனைவரும் வழிகாட்டு நடைமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று குறையாத மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளை அறிவிக்க வேண்டாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.

மருந்துவ வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனையை நிறைவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்ததாக மருத்துவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்னராக இன்று மாலை 30 மாவட்டங்களுக்கு தனியாக தளர்வுகளும், கொரோனா கட்டுக்குள் வராத 8 மாவட்டங்களுக்கு தனியாகஅரசாணைyum வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
