கருணாநிதிக்காக இரங்கற்பா எழுதியதால் டிஸ்மிஸான பெண் போலீஸுக்கு மேயர் சீட்டா..? திருச்சியில் திகு திகு..!
ஸ்டாலினிடம் செல்வராணிக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ளது. தலைமையில் இருந்து சிக்னல் கிடைத்ததால், மேயர் பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார்.
திருச்சி மாநகர போலீசில், ஏட்டாக பணிபுரிந்தவர் செல்வ ராணி. இவரது கணவர் ராமச்சந்திரன், தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். கவிசெல்வா என்ற பெயரில், செல்வராணி பல கவிதைகள் எழுதியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி இறந்தபோது, அவரை, 'அப்பா' என்றழைத்து இரங்கற்பா எழுதி, சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதுகுறித்து கடந்த ஆகஸ்டு 14-ம் தேதி திருச்சி காவல்துறை அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விளக்கமளித்த அவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்தனர். இதனால் அவர் தனது பணியை இராஜினமா செய்தார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்காக திருச்சி சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், செல்வராணியின் விவரத்தை அறிந்து நேரடியாக அவரது வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்து உரையாற்றினார்.
விருப்ப ஓய்வு பெற்ற அவர் தி.மு.க.,வில் இணைந்தார். இந்நிலையில், திருச்சி மேயர் பதவிக்கு போட்டியிட, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவிடம், செல்வராணி விருப்ப மனு அளித்துள்ளார். செல்வராணி ஆதரவாளர்கள் கூறுகையில், 'ஸ்டாலினிடம் செல்வராணிக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ளது. தலைமையில் இருந்து சிக்னல் கிடைத்ததால், மேயர் பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார். அவருக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது' என்றனர்.
ஆனால் மற்றொரு தரப்பினரோ செல்வராணி திமுகவுக்காக என்ன தியாகம் செய்திருக்கிறார். போராட்டத்தில் கூட கலந்து கொண்டதில்லை. ,மு.க.ஸ்டாலின், செல்வராணியின் வீட்டுக்கு போய் ஆறுதல் சொன்ன அந்த வாய்ப்பை தவறவிடுவாரா செல்வராணி? தனது சுய புராணத்துடன் காவல்துறையில் தனக்கு வழங்கப்பட்ட மெமோ மற்றும் விருப்ப ஓய்வு சான்றிதழ்களை ஸ்டாலினிடம் காட்டி, தான் காவல்துறையால் பழிவாங்கப்பட்டிருப்பதாகக் கூறி, இனி காவல்துறையில் தான் இருந்து என்ன பயன் என்று தனது வேலையினையே ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்டாலின் ‘இனி உனக்கு அண்ணனாக நானிருப்பேன் கவலை வேண்டாம்’என ஆறுதல் கூறிச் சென்றுள்ளார்.
தலைமைக் காவலர் செல்வராணி தி.மு.கவுக்காக எந்தவொரு போராட்டத்தையும் சந்திக்காதவர், தியாகத்தையும் செய்திராதவர். குறைந்த பட்சம் கட்சியில் உறுப்பினராகக் கூட இல்லாமல் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து, பணியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக விருப்ப ஒய்வினைப் பெற்ற ஒரு பெண்மணிக்கு முக்கியத்துவம் தந்து ஆறுதல் சொல்ல அவரது இல்லத்துக்கு மாபெரும் கட்சி ஒன்றின் தலைவர் சென்றது சரியல்ல. தவறானத் தகவலைத் தந்து தலைவரை யாரோ தவறாக வழி நடத்தி இப்படியெல்லாம் ஆட்டுவிப்பது வேதனைக்குரியது. இந்த ஒரு காரணத்தை மட்டுமே வைத்து செல்வராணிக்கு மேயர் வாய்ப்பு கொடுப்பது தவறானது எனக் குமுறுகிறார்கள்.