புத்த மதத்துக்கு மாறுகிறார் மாயாவதி ! பல்லாயிரக்கணக்கானோருடன் இணைய முடிவு !!
பல்லாயிரக்கணக்கான மக்களுடன் தகுந்த நேரத்தில் புத்த மதத்துக்கு மாற உள்ளதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 21 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாக்பூரில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் அக் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “அண்ணல் அம்பேத்கர் மரணத்துக்கு முன்னதாக புத்த மதத்துக்கு மாறினார். நானும் மதம் மாறப் போகிறேன். நிச்சயமாக புத்தமதத்தைப் பின்பற்றி தீட்சை பெறுவேன்.
புத்த மதத்திற்கு நான் மட்டுமின்றி இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மாறி தீட்சை பெறுவேன். ஆனால் அதற்கு சரியான காலம் வர வேண்டும். அரசியலில் நாங்கள் இருந்தாலும் அம்பேத்கரை பின்பற்றுபவர்களால் இத்தகைய மதமாற்றம் என்பது சாத்தியமானதுதான்” என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் 24-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.