கிஷோர் கே சாமி கைது நடவடிக்கைக்கு திமுக ஆட்சியைக் கலைப்பதுதான் சரி என்று தெரிவித்திருந்த மாரிதாஸுக்கு திமுக எம்.பி. சவால் விட்டுள்ளார். 

சமூக ஊடங்களில் ஆக்டிவாக இருப்பவர் கிஷோர் கே.சாமி. தீவிர அரசியல் விமர்சகரான இவர், திமுகவுக்கு எதிராகவும் அக்கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் பல கருத்துகளை தெரிவித்துவந்தார். இந்நிலையில் அவர் மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கிஷோர் கே.சாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
இந்நிலையில் கிஷோர் கே சாமியை போலீஸார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை தாம்பரம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின்னர் கிஷோர் கே சாமி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


கிஷோர் கே.சாமி கைதுக்கு கண்டனம் தெரிவித்து சமூக ஊடக பிரபலம் மாரிதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் தி.மு.க ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார்.சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பதுதான் சரி” எனப் பதிவிட்டிருந்தார்.
மாரிதாஸின் இந்தப் பதிவுக்கு தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில் குமார், “தைரியம் இருந்தா கை வைச்சு பாரு... நீங்க எல்லாம் யாரு? நீங்க சொல்லிட்டா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிடுவர்களா? செம காமெடி. நிறைய வேலை இருக்கு. அவங்க வரும்வரை நேரத்தை பயன் உள்ளதாகச் செலவழிக்கவும். பி.கு: உள்ளே போகும் போது மறக்காம போர்டை எடுத்துட்டு போகவும்” என செந்தில் குமார் பதிவிட்டுள்ளார்.