ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தயாநிதி மாறன் கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் 2ஜி உரிமத்தை அதன் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாகவும், அதன் மூலம் சன் குழும நிறுவனங்களில் 743 கோடி ரூபாயை முதலீடாக மொரிஷியஸ் நாட்டின் வழியே பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இதேபோல், கடந்த ஆண்டு அமலாக்கப் பிரிவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை அடுத்து, தயாநிதிமாறன், கலாதிநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவி காவேரி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த மாதம் 24-ந் தேதி நடைபெற்றது.
இதன் தீர்ப்பை பிப்ரவரி 2ம் தேதிக்கு நீதிபதி ஓபி ஷைனி ஒத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் பிப். 2ஆம் தேதியான இன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி ஓபி ஷைனி உத்தரவிட்டார்
