நான் உயிரோட இருக்கும் வரைக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்த முடியாது !! மம்தா மீண்டும் உருக்கம் !!
நான் உயிருடன் இருக்கும் வரை குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வடமாநிலங்களில் இதற்காக பெரும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இருபதுக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் . மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நாள்தோறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் செயல்படுத்தப்படாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நைஹாட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “மத்திய அரசு தடுப்பு முகாம்களை அமைப்பதாக கூறுகிறார்கள். நான் என் உயிரைக் கொடுக்க தயாராக இருக்கிறேன். நான் இறந்தாலும் தடுப்பு முகாம்களை அமைக்க மத்திய அரசை அனுமதிக்க மாட்டேன்.
யாரும் நாட்டைவிட்டோ அல்லது மாநிலத்தை விட்டோ வெளியேற வேண்டியதில்லை. மேற்கு வங்காளத்தில் எந்த தடுப்புகாவல் முகாமும் இருக்காது என ஆவேசமாக தெரிவித்தார்.