இந்தி படிக்கச் சொல்லி தமிழகத்தை கட்டாயப்படுத்த முடியாது ! மோடி அரசு மீது பாய்ந்த மம்தா பானர்ஜி !!
புதிய கல்விக் கொள்கையில் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என மத்திய அரசு வலிறுத்தி வருவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதையடுத்து, இவ்விவகாரத்தில் தமிழ் நாட்டை கட்டாயப்படுத்த முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் அம்தா பானர்ஜி காட்டமாக தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்த மத்திய அரசு, இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பதை நீக்கியது.
விருப்பத்தின் அடிப்படையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்றது. கட்டாய இந்தி மொழி விவகாரம் மேற்கு வங்காளத்திலும் எதிர்ப்பை சந்தித்தது. மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே வாக்குவாதமும் நேரிட்டது.
இப்போது இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கென ஒரு மொழியை கொண்டுள்ளது என்றார். தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக பாரம்பரியம் மற்றும் மொழி உள்ளது. இது நம்முடைய இந்தியா. மாநிலங்களின் விதியை பா.ஜனதா நிர்ணயம் செய்ய முடியாது. தமிழகத்தில் மக்கள் இந்தி படிக்க வேண்டும் என்று பா.ஜனதா சொல்ல முடியாது. பா.ஜனதா கட்டாயப்படுத்தக்கூடாது எனக் கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.