மக்கள் நல கூட்டணியின் ஆதரவு யாருக்கு? - இன்று மாலை அறிவிக்கப்படும்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. இந்த தொகுதிக்கான இடை தேர்தல் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள்
தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
அதிமுக சார்பில் 3 அணிகள் களம் இறங்குகின்றன. ஒரு அணியில் தீபா போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா அணியில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கவில்லை.
தேமுதிக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் நேர்காணல், அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கிறது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணி கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்தரசன் கூறுகையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருமாறு ம.ந.கூவிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். இதுபற்றி இன்று நடக்கும் எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
அதன் பின்னர், கூட்டணியில் உள்ள ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி, மாலையில் நல்ல முடிவு தெரிவிக்கப்படும்.