வேற வழியே இல்லை... ஊரடங்கை அமல்படுத்திய மகாராஷ்டிரா அரசு... வார இறுதி லாக் டவுன்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில அமைச்சர் அஸ்லாம் ஷேக் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில அமைச்சர் அஸ்லாம் ஷேக் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
அதேசமயம், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுளை தீவிரப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகிறன. ஹோம் டெலி வரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பகல் நேரத்தில் 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூட தடை விதிக்கப்படுகிறது.
தொழிற்சாலைகள் இயங்க தடையில்லை. அதேசமயம் போதிய கரோனா வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். காய்கறி சந்தைகள் செயல்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.அனைத்து தியேட்டர்களும் மூடப்படும். படப்பிடிப்பு உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ளலாம். 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பொதுப் போக்குவரத்து செயல்படும்.
அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற வேண்டும். அத்தியாவசிய தேவை உள்ள ஊழியர்கள் மட்டுமே அனுமதி பெற்று வர வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.