”எங்களின் தர்மயுத்தத்தில் கமல் பங்கேற்க வேண்டும்” - அழைப்பு விடுக்கும் மாஃபா..!!!
ஊழல் குறித்து கருத்து தெரிவித்து வரும் கமலஹாசன் நாங்கள் நடத்தும் தர்ம யுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என ஒபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை எனவும் கமலஹாசன் அண்மை காலங்களில் விமர்சித்து வந்தார்.
அதன்படி நேற்று 3 டுவிட்களை கமலஹாசன் பதிவு செய்துள்ளார். அதில், எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது எனவும், தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நடந்தால் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், ஊழலில் இருந்து நாம் இன்னும் சுதந்திரம் பெறாத நிலையில் நாம் இன்னும் அடிமைகளே எனவும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று செய்தியாளரகளை சந்தித்த மாஃபா பாண்டியராஜன், கமலஹாசன் அரசு குறித்து கருத்து கூறுவது வரவேற்க தக்கது எனவும் ஆனால் அந்த கருத்தை அரசியலுக்கு வந்த பிறகு சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஊழல் குறித்து கருத்து தெரிவித்து வரும் கமலஹாசன் தர்ம யுத்தத்தில் பங்கேற்க வேண்டும் எனவும், ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.