இரண்டு சாமிகளும் இப்போ இல்ல... கண்கலங்கி அழும் சின்னப் பிள்ளை!
மதுரையைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் களஞ்சியம் சின்னப்பிள்ளை, வாஜ்பாய் தனது காலில் விழுந்தது குறித்து பேசி கண்கலங்கியுள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதியன்று மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத் துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில், ஸ்திரீ ஷக்தி புரஷ்கார் விருது மாதா ஜீஜாபாய் பெயரால் வழங்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் களஞ்சியம் சின்னப்பிள்ளை, வாஜ்பாய் தனது காலில் விழுந்தது குறித்து பேசி கண்கலங்கியுள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் கார்கில் நாயகன் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வாஜ்பாய் குறித்த நினைவுகளை மதுரை சின்னப்பிள்ளை தெரிவித்தார்.
இந்த விருதுக்காகத் தேர்வு செய்வதற்கு முன்பாக, மத்திய அரசிலிருந்து மூன்று முறை எனது வீட்டிற்கு அதிகாரிகள் வந்திருந்து ஆய்வு மேற்கொண்டனர். பிறகு, எனக்கு விருது கிடைத்திருப்பதாகக் களஞ்சியம் நிறுவனத்திலிருந்து சொன்னார்கள்.
டெல்லியில் நடைபெற்ற அந்த விழாவிற்காக, முதன்முதலாக மதுரையிலிருந்து விமானத்தில் சென்றேன். விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் எனது பெயர்தான் முதலில் அறிவிக்கப்பட்டது. அப்போது விருது மற்றும் சான்றிதழை வழங்கிய பிரதமர் வாஜ்பாய், ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடடினயாக எனது காலில் விழுந்தார். இதனை நானும் எதிர்பார்க்கவில்லை. அரங்கத்திற்குள் உட்கார்ந்திருந்த பார்வையாளர்களும் எதிர்பார்க்கவில்லை. நான் பதறிப்போய் அவரது கைகளைப் பற்றினேன். பிறகு, என்னை அறியாமலேயே நானும் அவரது காலில் விழுந்து வணங்கினேன்.
பார்வையாளர்கள் சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது, என் காதில் கரகோஷம் பலமாக விழுந்தது. என் கண்ணிலும், நெஞ்சிலும் வாஜ்பாய் என்ற உயர்ந்த மனிதர் மட்டுமே நிறைந்து காணப்பட்டார். மேடையில் பேசும்போது, மதுரை சின்னப்பிள்ளையின் வடிவத்தில் நான் 'ஷக்தி'யைப் பார்க்கிறேன் என்று என்னை உயர்த்திப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிறகு களஞ்சியம் தொடர்பாக டெல்லி சென்றபோது, வாஜ்பாயைப் பார்ப்பதற்காகப் பெரிதும் முயன்றேன். அவர் வாய் பேச இயலாத நிலையில் இருப்பதாக எல்லோரும் சொன்னபோது அழுதுவிட்டேன். மேலும் கலைஞர் இறந்து ஒரு வாரத்துல, இவரும் இறந்தது ரொம்ப கஷ்டமாயிருக்கு. இரண்டு சாமிகளும் இப்போ இல்ல என கண்கலங்கி அழுதுள்ளார்.