மண் புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்... எடப்பாடி பழனிச்சாமி அரசை தாறுமாறாக விமர்சித்த ஸ்டாலின்!
“அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு மேலும் ஓர் உதாரணம். சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஆறு பேரை எடப்பாடியின் காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது."
சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் சில மாணவிகளும் மாணவர்களும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த கோலம் போடப்பட்ட பகுதிக்கு வந்த அடையாறு சாஸ்திரி நகர் காவல் துறையினர் கோலத்தை வரைய அனுமதி மறுத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை போலீஸார் கைது செய்து சமூக ஊடகத்தில் வைத்தனர்.
இந்நிலையில், மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு மேலும் ஓர் உதாரணம். சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஆறு பேரை எடப்பாடியின் காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக்கூடப் பயன்படுத்தத் தடைவிதிக்கும் தரங்கெட்ட ஆட்சி இது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும். மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.