அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அமைச்சராக இருந்தவரே, அதன் தலைவராக இருப்பவர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்த பிறகும் - அந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை பாதுகாப்பதில் முதல்வர் மிகுந்த ஆர்வமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எஸ்டி செட்டப் பாக்ஸ் தயாரிக்கும் ‘வில்லட்’ நிறுவனத்தையும் உடுமலை ராதாகிருஷ்ணன் நடத்தி வருகிறார் என்று இன்னொரு ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டையும் துறை அமைச்சராக இருந்தவரே கூறியிருக்கிறார்.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து உடுமலை ராதாகிருஷ்ணனை நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் கீழ் செயல்பட்டுவந்தது. அந்தப் பொறுப்புக்கு உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த மணிகண்டன், உடுமலை ராதாகிருஷ்ணனையும், அவர் செய்துவரும் கேபிள் டி.வி. தொழில் பற்றி விமர்சித்தார். அந்தப் பேட்டி வெளியான அடுத்த ஒரு நாளுக்குள் அமைச்சர் பொறுப்பிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அமைச்சராக இருந்த மணிகண்டன், ‘தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உடுமலை ராதாகிருஷ்ணன், 2 லட்சம் கேபிள் இணைப்புகள் கொண்ட தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்’ என்று குற்றச்சாட்டை கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்து, லஞ்ச - ஊழல் செய்கிறார்கள் என்பதற்கு அந்தக் கூட்டத்திலிருந்தே ஓர் ஆதாரமாக வெளிவந்திருக்கிறது.

