எஸ்.பி.பிக்கு அரசு மரியாதை தேவை... எடப்பாடி பழனிச்சாமிக்கு அவசரமாக கோரிக்கை விடுத்த மு.க. ஸ்டாலின்..!
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். மறைந்த எஸ்.பி.பி.க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் நெஞ்சில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடிப் புகழ் பெற்று விளங்கி, மத்திய அரசின் பத்மஸ்ரீ - பத்மபூஷண் விருதுகள் பெற்ற மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்!
எல்லைகள் கடந்து ரசிகர்களுக்கு இன்னிசை தந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் மத்திய - மாநில அரசுகளாலும், புகழ்பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.