இட ஒதுக்கீடு வழக்கின் வெற்றிக்கு முதலாக வித்திட்டவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். “இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மூன்று மாத காலத்திற்குள் மத்திய அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்து அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் அவ்வளவு கால அவகாசம்கூட தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. எனவே, இடஒதுக்கீடு தீர்ப்பில் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இட ஒதுக்கீடுக்கு பிரச்னை ஏற்பட்ட உடனேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முழு முதல் முயற்சி மேற்கொண்டு வழக்கு தொடர்ந்து போராட அனைத்து கட்சிகளையும் வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் இந்த விஷயத்தில் எல்லாக் கட்சிகளும் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முதலாக வித்திட்டவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். இதில் மாற்றுக் கருத்தே கிடையாது. இட ஒதுக்கீடு தீர்ப்பு கிடைக்கப்பெற்றதில் மு.க.ஸ்டாலினின் பங்கு கணிசமாக உள்ளது.