கருணாநிதியின் வாரிசு ஸ்டாலின் தான்!! உறுதி செய்த இறுதி அஞ்சலி சம்பவம்!!
திமுக தலைவர் கருணாநிதி உடலின் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி மு.க.ஸ்டாலிடன் வழங்கப்பட்டது
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் அவரது உடல் மீது போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது, பொதுவாக இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின்படி இறந்தவரின் வாரிசுதாரர்கள்தான் இறுதி சடங்கில் தேசிய கொடியை பெறுவது வழக்கம்.
ஆனால் ஜெயலலிதா மறைந்தபோது தேசிய கொடி சசிகலாவிடம் கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறந்தவரின் வாரிசுதாரர் அல்லாத நபரிடம் எந்த அடிப்படையில் தேசிய கொடியை ஒப்படைக்கலாம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அண்ணா நினைவிட பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.. அண்ணா நினைவிடம் வந்த கருணாநிதியின் உடல் முப்படைகளின் பேண்டு வாத்தியம் முழங்க நல்லடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இறுதி சடங்கு செய்யும் பணிகள் தொடங்கின.
அண்ணா நினைவிடம் வந்த கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேவேகவுடா, சந்திர பாபு நாயுடு, பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
கருணாநிதிக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். அப்போது திமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து கருணாநிதியின் வாரிசு மு.க.ஸ்டாலின்தான் என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் – அழகிரி இடையே நிலவும் பனிப்போர் மிகப் பெரிய அளவில் வெடிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், கருணாநிதியின் உடல் மீது போர்த்தப்படிருந்த தேசியக் கொடியை ஸ்டாலின் பெற்றுக் கொண்டதன் மூலம் அவர் தான் வாரிசு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.