பரவும் துப்பாக்கி கலாச்சாரம்... வடமாநிலங்களாக மாறுகிறதா தமிழகம்..? எடப்பாடியாருக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி..!
வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கி வருகிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், “தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி, மக்களிடையே பதற்றத்தைப் பரப்பி உள்ளன. வட மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கி வருகிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சவுகார்பேட்டையில் மூன்று கொலைகள்; கொலை செய்ய, காஞ்சிபுரத்தில் கொலையாளிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒருவர் கொலை; பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயம்.
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் தொடர்ச்சியாகத் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளத்துப்பாக்கிகள் கணக்கற்றுப் போய்விட்டன. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, சுயவிளம்பரத்திலும், அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் மட்டும் முக்கிய கவனம் செலுத்துகிறாரா?” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.