சமூகநீதிக்கான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மீது மத்திய பா.ஜ.க. அரசு மேல்முறையீடு எதுவும் செய்திடக் கூடாது என்று நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன் என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூகநீதி வரலாற்றில் இது ஒரு பொன்னாள்… பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் குரல், சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஆம்! இன்றைய தினம், “மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு” அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு” என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.


இன்றைய தீர்ப்பில், “இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற மருத்துவக் கவுன்சில் வாதத்தை நிராகரித்து, ‘மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை’ என்று குறிப்பிட்டு, ‘திறமை (Merit) என்று காரணம் கூறி ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை’ என்று அழுத்தம் திருத்தமாக நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பு; நான்கு ஆண்டுகளாக, “இல்லாத ஒரு காரணத்தைக் கூறி” பி ற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இந்திய மருத்துவக் கழகமும், மத்திய பாஜக அரசும் கூட்டணி அமைத்து, இழைத்து வந்த அநீதிக்கு ஒரு முடிவு கட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மண்டல் கமிஷன் பரிந்துரைக்குச் செயல்வடிவம் கொடுத்து, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நேரத்தில் தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சிக்கடலில் நீந்தியது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர்,
“ஒதுக்கியே தீர்வது
ஒடுக்கப்பட்டோருக்கு
இடஒதுக்கீடு என
எதிர்நீச்சல் போட்டு
எழுந்து நின்றது
திராவிட இயக்கம்”
- என்று எழுதிய ‘மண்டல் கவிதை’ வரிகள்தான், என் நினைவில் மட்டுமல்ல; ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ரத்த நாளங்களில் ஜீவனாக இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.
“மருத்துவக் கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கத் தயார்” என்று, மத்திய பாஜக அரசு உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் ஒப்புக்கொண்டாலும், சில நிபந்தனைகளை விதித்து, ஏமாற்றத்தையும் சேர்த்தே கொடுத்தது. அதே நேரத்தில், இந்திய மருத்துவக் கழகத்தை விட்டு, “மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட வைத்த மத்திய பா.ஜ.க.அரசு - “பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடும்” வேலையைப் பார்த்தது.
ஆனால் திமுக வழக்கறிஞர்கள் - இந்த வழக்கில் பங்கேற்ற மற்ற கட்சிகளின் வழக்கறிஞர்கள் எல்லாம் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அநீதியை, சென்னை உயர்நீதிமன்றம் முன்பு மிகத் தெளிவாகவும் - ஆணித்தரமாகவும் எடுத்துரைத்து வாதிட்டதால், இன்றைக்கு, “மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உண்டு; அதற்கு உரிமை உள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் கோரிக்கையில் நியாயம் உள்ளது” என்று தீர்ப்பளித்துள்ளது, சென்னை உயர்நீதிமன்றம்.