அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணனி வழங்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சராக இருப்பவர் செங்கோட்டையன். மற்ற துறைகளை விட பள்ளிக்கல்வித்துறையில் தான் அடிக்கடி அதிரடியான திட்டங்கள் வெளியாகி கொண்டே இருக்கும். இதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விருது வழங்கினார். 377 பள்ளி ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுடன் 10000 ரூபாய் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், ஆசிரியர்கள் ஒற்றுமையாக பணிகளை மேற்கொண்டால் தமிழக கல்வித்துறை பின்லாந்து நாட்டை விட முன்னோடியாக இருக்கும் என்றார். மத்திய அரசின் உதவியுடன் அரசு பள்ளிகளுக்கு 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் முதல்வரிடம் பேசி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மடிக்கணனி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.