kushboo will join with kamal

காங்கிரஸ் கட்சியில் ஓரங்கட்டப்பட்டதால் அதிலிருந்து விலகி கமல் ஆரம்பிக்க இருக்கும் கட்சியில் இணைய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுகவிலிருந்து விலகிய குஷ்பு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு தேசிய செய்தித்தொடர்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்பு, அவர் தலைவராக இருந்தவரை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அடிக்கடி சென்று கட்சி பணியாற்றி வந்தார். 

ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திருநாவுக்கரசர் பதவியேற்ற பிறகு, குஷ்பு கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். அவரும் கட்சி அலுவலகத்துக்கு செல்வதை தவிர்த்துவிட்டார். 

காங்கிரசில் தீவிர உறுப்பினர் என தேர்வு செய்யப்பட்டால்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி உள்ளது. ஆனால் தீவிர உறுப்பினராக குஷ்பு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் குஷ்பு அதிருப்தியில் உள்ளார் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு குறித்த நேரத்தில் விண்ணப்பிக்காததால் பொதுக்குழு உறுப்பினராவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

காங்கிரசில் தனக்கென்று எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இருப்பதால் அக்கட்சியிலிருந்து விலகுவது குறித்து யோசித்து வருகிறாராம். ரஜினியோ கமலோ கட்சி ஆரம்பிக்கும் வரை காங்கிரசில் நீடிக்கவும் அதன்பிறகு அவர்களில் யார் முதலில் கட்சி ஆரம்பிக்கிறார்களோ அவர்களுடன் இணைய திட்டமிட்டுள்ளாராம் குஷ்பு.