kumarasamy press meet about the rulung for 5 years in karnataka
கர்நாடகாவில் 30 மாதங்கள் மதச்சார்பற்ற ஜனதா கட்சியும் 30 மாதங்கள் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி செய்யும் என்ற வந்த செய்திகள் வதந்தி என்றும் 5 ஆண்டுகளும் நானே முதலமைச்சராக இருப்பேன் என மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய்வாலா அழைப்புவிடுத்திருந்தார்.
அதன்படி எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார். ஆனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஜனதாதளம் (எஸ்)–காங்கிரஸ் கூட்டணி சார்பில் குமாரசாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். அவர் நாளை மறுநாள் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

இதற்கிடையே, கூட்டணி ஆட்சி தொடர்பாக பல்வேறு தகவல்களும், புதுப்புது வதந்திகளும் வந்தபடியே உள்ளன. ஜனதாதளம் (எஸ்) கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தலா 30 மாதங்கள் ஆட்சி செய்யும் என்று தகவல் வெளியானது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மஜத தலைவர் குமாரசாமி, “காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆட்சியை பகிர்ந்து கொள்வதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் எதுவும் பேசவில்லை. இந்த தகவல் வெறும் வதந்தி. இந்த கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டுகளும் நானே முதலமைச்சராக இருப்பேன் என கூறினார்.
அதேப் போல் ராஜராஜேஸ்வரி நகர், ஜெயநகர் ஆகிய சட்டசபை தேர்தல் தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர்களுடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை“ என்று தெரிவித்த குமாரசாமி, இன்று சோனியா மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக கூறினார்.
