வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது... அடம்பிடிக்கும் கிருஷ்ணசாமி..!
தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கக் கூடாது என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கக் கூடாது என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுகவுடனான கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் வகித்தது. எனினும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. அத்துடன் நில்லாமல் சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் வேட்பாளர்களையும் நிறுத்தியது. தேர்தலில் ஓட்டபிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் வாக்காளர்களுக்கு 500, 1000 ரூபாய் கொடுத்துள்ளனர். இதுபோன்ற தேர்தலைச் சந்தித்ததே கிடையாது. தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் தேர்தல் ஆணையம் ஒன்று இருக்கிறது என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், “வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்களைப் பிடித்துக் கொடுத்தால் கூட அவர்களை விட்டு விட்டுப் பிடித்துக் கொடுப்பவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. வாக்குரிமை சுதந்திரம் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கக் கூடாது” என்று வலியுறுத்தினார்.