அதிமுக ரகசியங்களை திமுகவினரிடம் கூறிவருகிறார் கே.பி முனுசாமி.. பகீர் கிளப்பிய கோவை செல்வராஜ்.
அதிமுகவின் ரகசியங்களை திமுகவிடம் கூறி திமுகவின் கைக்கூலி போல செயல்படுகிறார் என கே.பி முனுசாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் ரகசியங்களை திமுகவிடம் கூறி திமுகவின் கைக்கூலி போல செயல்படுகிறார் என கே.பி முனுசாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 7 முன்னாள் அமைச்சர்களும் கட்சியில் இருந்து பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓபிஎஸ் இல்லத்தில் அவரை சந்தித்த கோவை செல்வராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதற்கான தீர்மானம் வெளியானது. இந்நிலையில் அப்பொதுக் குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுக்கூட்டம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி கடந்தவாரம் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் முனுசாமியின் மகன் எ.ம் சதீஷ்க்கு கிருஷ்ணகிரியில் பால் வளத் துறைக்கு சொந்தமான இடம் 99 ஆண்டுகள் வாடகைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் வழங்கி அமைச்சர் காந்தி உதவி செய்துள்ளார். அவருக்கு பெட்ரோல் பங்கையும் காந்தி திறந்து வைத்துள்ளார். அதேபோல அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் முனுசாமி கூறிவருகிறார். மொத்தத்தில் அவர் திமுகவில் கைக்கூலியாகவே செயல்பட்டு வருகிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஆட்பட்ட 7 முன்னாள் அமைச்சர்களும் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், தங்களை நிரபராதிகள் என அவர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் கட்சி பதவியில் இருந்து விட்டு விலக்கி வைக்கப்பட வேண்டும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் குடும்ப அரசியல் லஞ்சம் போன்றவற்றை எதிர்க்கும் கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறும்போது அப்பாவி தொண்டர்கள் வெளியே நிற்க வைத்து ஏன் கோஷம் போட வைக்க வேண்டும். தனிநபர்கள் கட்சி தொண்டர்களை இப்படி பயன்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.