கோவை தெற்கில் வானதி சீனிவாசன் பெற்ற வெற்றி செல்லாது என்றும்,அவர் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்துவிட்டார்.அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சுயேச்சை வேட்பாளர். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி ‘கோவை தெற்கு’ ஆகும். இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார்,அமமுக சார்பில் சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்தார் கமல்ஹாசன். 21வது சுற்று வரை முன்னிலை வகித்தார். அதன் பிறகு மாலை 5 மணிக்கு பிறகு 22ஆவது சுற்று எண்ணத்தொடங்கியபோது, கமலையும், மயூரா ஜெயகுமாரையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு வானதி முன்னேறினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

25, 26 என கடைசி சுற்று நெருங்கியபோது இரண்டாமிடத்தில் இருந்த கமலை விட அதிக வாக்குகளை வானதி பெற்றதைத் தொடர்ந்து அவரது வெற்றி உறுதியானது.தமிழகம் முழுக்க திமுக கூட்டணி வெற்றி பெற்றதை கவனித்த மக்களுக்கு, கமல் போட்டியிடும் கோவை தெற்கில் என்ன முடிவு என்று மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். கமலின் தோல்வி பெரும்பான்மையான மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்தவர் கடைசி சுற்றுகளில் எப்படி பின்னுக்கு தள்ளப்பட்டார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது.

கோவை தெற்கில் வானதி சீனிவாசன் பெற்ற வெற்றி செல்லாது என்றும்,அவர் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்துவிட்டார்.அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சுயேச்சை வேட்பாளர். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ராகுல் காந்தி. இவர் ஹிந்துஸ்தான் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் ஆக இருக்கிறார்.இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டார்.இதுகுறித்து பேசிய அவர், ‘கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிட்டு தோல்வியை தழுவியது கூட தனக்கு, பெரிய வருத்தம் இல்லை. 

ஆனால், தேர்தல் ஆணையத்தின் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்து வெற்றி பெற்ற வானதி சீனிவாசனின் வெற்றியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கோவை தெற்கு தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்த வேண்டும். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் செய்து வருகிறேன். மாவட்ட ஆட்சியர், தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் வரை சென்று மனு அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருக்கிறேன்.

தனது வழக்கு விசாரணையை ஏற்று கொண்ட நீதிபதியினர், இந்த வழக்கு குறித்து முதற்கட்ட விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளனர். இது சம்பந்தமாக அனைத்து நபர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி வெற்றி பெற்றது செல்லாது.அவர் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்து வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.நிச்சயம் கோவை தெற்கில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும்’ என்று கூறினார். ஏற்கனவே காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக குற்றசாட்டு வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இச்சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.