Kolathur Inspector shot periya pandi..Rajasthan police FIR

கொள்ளையன் நாதுராமை பிடிக்கச் சென்றபோது கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியால் சுட்டதில் பெரிய பாண்டி மீது குண்டு பாய்ந்து அவர் இறந்ததாக ராஜஸ்தான் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை, கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது.

கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, ஆய்வாளர் பெரியபாண்டியன் மட்டும் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி வீர மரணம் அடைந்தார்.

தற்போது இவருடைய மரணத்தில் பல முக்கிய சந்தேகங்கள் எழுந்தன. இதுகுறித்து ஆய்வாளர் முனிசேகர் ராஜஸ்தான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 3 பெண்கள் உட்பட 5 பேர் கட்டை, இரும்புக் கம்பியால் போலீசாரை தாக்கினர். 

கொள்ளையர்கள் தாக்கியதில் தன்னுடைய துப்பாக்கி தவறி விழுந்தது. கொள்ளையர்களின் தாக்குதலையடுத்து எல்லோரும் தப்பிவிட தவறி விழுந்த என்னுடைய துப்பாக்கியை ஆய்வாளர் பெரியபாண்டியன் எடுத்தார். அவர்கள் மத்தியில் பெரியபாண்டியன் சிக்கிக் கொண்டார்.

இதைதொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பெரிய பாண்டியன் இறந்து கிடந்தார். பெரியபாண்டியனை கொள்ளையர்கள் சுட்டதாக முனிசேகர் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என தகவல் வெளியாகியது. 

இதையடுத்து முனிசேகர் துப்பாக்கியை ஆய்வு செய்தபின் ராஜஸ்தான் பாலி போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், கொள்ளையர்கள் கம்பியால் பெரிய பாண்டியை தாக்கியதால் அவரால் தப்ப முடியவில்லை எனவும் முனிசேகர் கொள்ளையரை நோக்கி சுட்டதில் குறிதவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சென்னை கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தரன் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது அஜாக்ரதையாக செயல்பட்டு பெரியபாண்டியன் உயிர் பிரிய காரணமாக இருந்ததாக முனிசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளையன் நாதுராமை பிடிக்கச் சென்றபோது கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தவறுதலாக சுட்டதாலேயே பெரியபாண்டியன் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.