ஹாலிவுட் படத்தை மிஞ்சும் வகையில் கொடநாடு வழக்கில் மர்மம்... எம்.பி. கார்த்தி சிதம்பரம்..!
கொடநாடு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதில் உள்ள மர்மங்கள் விரைவில் வெளிவர வேண்டும். கொடநாடு வழக்கை அதிமுக ஏன் எதிர்க்கிறது எனப் புரியவில்லை.
ஜெயலலிதா மரணம் முதல் கொலை, கொள்ளை வரை அனைத்தும் மர்மமாகவே உள்ளது என எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் (50) கொலை செய்யப்பட்டார். மேலும், சிசிடிவி கேமரா ஆபரேட்டராக இந்த தினேஷ்குமார், கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழப்பு போன்ற விஷயங்கள் இன்னும் மர்மமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் கொடநாடு வழக்கை கிடப்பில் போட்ட நிலையில் புதிய அரசாக திமுக பொறுப்பேற்றதில் இருந்து இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்;- கொடநாடு என்றாலே ஆங்கில படங்களை விஞ்சும் மர்மங்கள் உள்ளன. அங்கு சொத்து வாங்கியது, பின்னர் பங்குதாரரை பிரித்தது வரை, ஜெயலலிதா மரணம் முதல் கொலை, கொள்ளை வரை அனைத்தும் மர்மமாகவே உள்ளது.
அந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதில் உள்ள மர்மங்கள் விரைவில் வெளிவர வேண்டும். கொடநாடு வழக்கை அதிமுக ஏன் எதிர்க்கிறது எனப் புரியவில்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் திமுக கூட்டணி தொடரும். இத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.