கேரள, புதுச்சேரி முதல்வர்கள் பங்கேற்கும் மாபெரும் மாநில சுயாட்சி மாநாடு..!
மாநிலங்களின் பல்வேறு உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாகவும் மாநில சுயாட்சிக்கு கட்டுப்பட்ட விஷயங்களில் மத்திய அரசு அத்துமீறி நுழைவதாகவும் தமிழகத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் நீண்டகாலமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நாடு தழுவிய பொது நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
மாநில சுயாட்சி தொடர்பான குரல்கள் ஓங்கிவிட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் மாபெரும் மாநில சுயாட்சி மாநாடு இன்று நடத்தப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.