தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல்வருக்கு கொரோனா... எவ்வித அறிகுறியும் இன்றி தொற்று உறுதியானதால் அதிர்ச்சி...!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்ததாக கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 2 ஆயிரத்திற்கும் குறையாமல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் எப்படி சட்டமன்ற தேர்தலின் போது வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்களோ?. தற்போது தேர்தலுக்குப் பிறகு அந்த சம்பவம் கேரளாவில் அரங்கேற ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி கொரோனாவுக்கான முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தன்னுடைய மகன், மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னைத் தானே வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் வீணா விஜயனின் கணவர் முகமது ரியாஸுக்கும் கரோனா தொற்று உறுதியானது. பினராயி விஜயனுக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், விரைவில் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.