அரை கம்பத்தில் பறந்த எதிரியின் கொடி... கருணாநிதியின் சக்ஸஸ் இது!
தமிழகமே கருணாநிதியின் இழப்பால் வேதனையில் ஆழ்ந்திருக்கிறது. தமிழுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் தொண்டர்கள் வேதனையில் ஒரு புறம் துடித்துக்கொண்டிருக்கையில். நெஞ்சை நெகிழவைக்கும் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது
என்ன தான் எதிரியாக இருந்தாலும் அவர்களின் மரணம் என்று வந்து விட்டால் பகையை மறந்து துக்கம் அனுசரிப்பது என்பது தமிழரின் மரபு. அந்த மரபை ஒரு போதும் மீறியதில்லை தமிழர்கள் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது தமிழகத்தில் தற்போது நடந்து வரும் செயல்கள்.
திராவிட இனத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு இன்று அனைத்து தமிழ் உள்ளங்களையும் துயர் கொள்ள செய்திருக்கிறது. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திமுகவிற்கு எப்போதும் எதிர் கட்சியாகவும், போட்டி கட்சியாகவும் இருந்துவரும் அதிமுக கட்சி சார்பாகவும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் அதிமுக கட்சி கொடி இப்போது அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் கலைஞருடன் திமுக கட்சியில் இருந்த எம்ஜிஆர் பின்னர் அங்கிருந்து பிரிந்து தான் அதிமுக கட்சியை தொடங்கினார். அன்றிலிருந்து இன்று வரை இந்த் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனாலும் இது போன்ற தருணங்களில் ஒருவருக்கான மரியாதையை மற்றவர் கொடுக்க எப்போதும் மறுத்ததில்லை.
ஜெயலலிதாவின் மரணத்தின் போது கூட இதே போல இரங்கல் தெரிவித்திருந்தனர் திமுகவினர். மேலும் ஜெயலலிதாவின் மரணத்தின் போது கலைஞர் தெரிவித்த இரங்கல் செய்தி மிகவும் உருக்கமானதாக இருந்தது. கலைஞர் அடி மனதில் இருந்து வருந்தினார் அப்போது . அதே போல இப்போது அதிமுகவும் அவருக்காக மரியாதை செலுத்தி இருக்கிறது. கருணாநிதி மறைந்தும் இந்த மாதிரி எதிரியின் கொடியையும் அரை கம்பத்தில் பறக்க விட வைத்திருக்கிறார். இதுதான் கலைஞரின் சக்ஸஸ்