"தினகரன் வழங்கிய பதவியை ஏற்றுக் கொள்கிறேன்" - திடீர் பல்டி அடித்த கதிர்காமு!!
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர், டி.டி.வி. தினகரன் அளித்த பதவி தனக்கு தேவையில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே இயங்கப் போவதாக அறிவித்த, பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமு, திடீரென அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவை முழுமையாக கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு அணியினரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், கடந்த வெள்ளியன்று, புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார். இதில் 19 எம்எல்ஏக்கள் இடம் பெற்றிருந்தனர்.
இதையடுத்து சத்யா பன்னீர் செல்வம், பழனி, ஏ.கே.போஸ், கதிர்காமு ஆகிய 4 எம்எல்ஏக்கள், தினகரன் அறிவித்த பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே தாங்கள் இயங்க விரும்புவதாகவும் அறிவித்தனர்.
இது தினகரன் தரப்பை அதிர்ச்சி அடையச் செய்தது. இதையடுத்து தினகரன் தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த 4 எம்எல்ஏக்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமுவின் வீட்டில் திரண்ட ஆதரவாளர்கள் கதிர்காமுவிடம் பேசினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கதிர்காமு, உடல்நிலை காரணமாக பொறுப்பை ஏற்க மறுத்ததாகவும், தற்போது தான் மருத்துவ அணி இணைச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்வதாக கூறி திடீர் பல்டி அடித்தார்.