காஷ்மீரில் கலவரம்… கல்வீச்சு…. சுற்றுலா சென்ற சென்னை இளைஞர் பரிதாப பலி !!
ஜம்மு – காஷ்மீரில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த கல்வீச்சு சம்பவத்தில் சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பர்காம் மாவட்டம் மகம் பகுதியில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. கடையடைப்பு , ஊர்வலம் உள்ளிட்டவைகள் மூலம் பொது மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் திடீரென கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் அங்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த திருமணி என்ற இளைஞர் படு காயமடைந்தார்.
பின்னர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணி தலையில் படுகாயம் அடைந்ததால் அவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. திருமணியுடன் சென்ற மேலும் 5 சுற்றுலா பயணிகளும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கல்வீச்சில் மரணமடைந்த திருமணியின் பெற்றோரை காஷ்மீர் முதலமைச்சர் முப்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்தார்.