ஒழுங்கா விசாரணைக்கு வரலைன்னா வேறு விளைவுகளை சந்திக்கணும்…. எஸ்.வி.சேகரை எச்சரித்த நீதிபதி
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகாத எஸ்.வி. சேகருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இனி ஒழுங்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்தக்க வேண்டடி வரும்அ என எச்சரித்தார்..
பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரினார்.
இதையடுத்து நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்து ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இதற்கு அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இது குறித்து பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச் சங்கத்தினர், எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்தனர்.
இந்நிலையில், எஸ்.வி.சேகர் மீதான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் ஜுலை 5 அன்று விசாரணைக்கு வந்தது. எஸ்.வி.சேகருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
எஸ்.வி.சேகர் ஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும் என்று கண்டித்த நீதிபதி, ஒழுங்காக விசாரணைக்கு வருவேன் என்று பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தருமாறு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும் வருகின்ற 20ஆம் தேதி எஸ்.வி.சேகர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.இனி ஆஜராகவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என நீதிபதி எச்சரித்தார்.