karunas dismissed from mukkulathor pulippadai

அளவுகளில், ஆழாக்கை விட சிறியது உழக்கு. அதிலும் எனக்கு வேண்டும் கிழக்கு என்று அடம்பிடித்தானாம் ஒருவன்.

அந்தக் கதையாக, தேர்தலுக்காக 10 - 15 பேரை ஒன்று சேர்த்து நடிகர் கருணாஸ் உருவாக்கியதுதான் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சி.

சினிமாவில் இருப்பவருக்கு ஒரு சீட் கிடைத்தால் பலமாக இருக்கும் என்று, விஷால் ரெட்டி, அப்போலோ ரெட்டியிடம் கூற, அவர் ஜெயலலிதாவிடம் சொல்லி கருணாஸுக்கு ஒரு சீட்டும் வாங்கி கொடுத்ததாக தகவல்.

ஜெயலலிதாவின் பேரை சொல்லி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திருவாடானை தொகுதிக்கும் எம்.எல்.ஏ ஆகிவிட்டார் கருணாஸ்.

மக்கள் கூட்டம் திரளும் விஜயகாந்தே டெபாசிட் இழந்த நிலையில், கருணாஸ் ஜெயித்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

அவர் அப்படியே அதை தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் படத்தில் காமெடியனாக வரும் கருணாஸ், நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் வில்ல தனத்தையும் சேர்த்து காமெடி பண்ண ஆரம்பித்தார்.

மறைந்த ஜெயலலிதாவின் உடல் அருகே நின்று செல்பி எடுத்த போதே, மக்களும், நெட்டிசன்களும் அவரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் அதன் பிறகும், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார். அதனால் அவர் மீது இருந்த கோபம் அதிகமானது.

அந்த நிலையில், கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏ க்கள், மனம் மகிழும் வகையில், கருணாஸ் சில ஏற்பாடுகளை செய்து கொடுத்தார் என்று ஊடகங்களில் பல அருவருப்பான செய்திகள் வெளியாகின.

அதனால், ஆத்திரமடைந்த திருவாடானை தொகுதி மக்கள், தொகுதிக்கு வந்த கருணாஸை, அங்கு நுழைய விடாமல் விரட்டி, விரட்டி அடித்தனர். அவர் கார் மீது செருப்புகளை வீசினர்.

இதற்கு காரணம், தமது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே என்று குற்றம் சாட்டிய கருணாஸ், நிர்வாகிகள் பலரை கட்சியில் இருந்து நீக்கியதாக, யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்தார்.

இந்நிலையில், மதுரையில் இன்று நடந்த முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியில் இருந்து கருணாஸை நீக்குவததாக, பொது செயலாளர் பாண்டித்துரை மற்றும் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

பருத்தி வீரன் படத்தில் கஞ்சா கருப்பை கலாய்க்க, நீங்கதானா ஓனர், பய புள்ள இவளோ நாளா சொல்லாம விட்டுடான்னே.. என்று சொல்வது போல், முக்குலத்தோர் புலிப்படையின் ஓனரை, இவ்வளவு நாளாக சொல்லாமல் விட்டுவிட்டார் கருணாஸ்.

உழக்கு சைசில் இருந்தாலும், "முக்குலத்தோர் புலிப்படை" ஒரு கட்சியாக இருந்தது. ஆனால், அதிலும் கிழக்கு, மேற்கு என கருணாஸும், கட்சி நிர்வாகிகளும் பங்கு போட்டுக் கொள்வது வேடிக்கை அல்லவா?