"முதல்வர் பதிலில் திருப்தி இல்லை" - அவையிலிருந்து வெளியேறிய அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள்!!
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் இன்று எழுப்பப்பட்ட பிரச்சனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய பதிலில் திருப்தி இல்லை என தெரிவித்து அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கருணாஸ், தனியரசு, தமிமூன் அன்சாரி ஆகியோர் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று மாட்டிறைச்சி தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் திமுக சார்பில் கொண்டுவரப்பட்டது. இதன் மீது எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சியினரும் பேசினர்.
கேரளா, மேகாலயா, புதுச்சேரி போல் தமிழகத்திலும் மாட்டிறைச்சி தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்பதால் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கருணாஸ், தனியரசு, தமிமூன் அன்சாரி ஆகியோர் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆளும் கட்சியின் ஆதரவு எம்எல்ஏக்களே அரசுக்கு எதிராக திரும்பியிருப்பது எடப்பாடி அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கி இருக்கிறது.