தைத்திருநாள் கொண்டாட்டத்தால் களை கட்டப் போகுது கோபாலபுரம்…. நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி…
தைத் திருநாளை முன்னிட்டு நாளை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதற்காக கோபாலபுரம் இல்லம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு களை கட்டியுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தை மாதம் முதல்நாள் தமிழ் புத்தாண்டு என அறிவிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டட்ங்கள், பாலங்கள் உள்ளிட்டவை சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
மேலும் திமுக தலைவர் கருணாநிதி அறிவாலயத்தில் பொது மக்களையும், தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்துச் சொல்லுவார். ஆயிரக்கணக்கான தொண்டர்களும், திமுக நிர்வாகிகளும் அன்று கருணாநிதியிடம் வார்த்துப்பொற்றுக் செல்வார்கள். அப்போது அவர் தொண்டர்களுக்கு 10 ரூபாய் பரிசாக வழங்குவார். இது காலகாலமாக பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில்தான் உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி தொண்டர்களை சந்திக்காமல் இருந்து வந்தார். தற்போது ஓரளவு அவர் குணமடைந்துள்ளதால் அண்மைக்காலமாக தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
2ஜி வழக்கில் திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோது கோபாலபுரத்தில் திமுக தொண்டர்களை பார்த்து கருணாநிதி கரங்களை அசைத்துச் சென்றது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
இந்நிலையில் தொண்டர்களுக்கு திமுக தலைமை மற்றுமொரு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது தைப்பொங்கல் தினமான நாளை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளார்.
இதற்காக கோபாலபுரம் இல்லம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. தொண்டர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி தொண்டர்களுக்கு 10 ரூபாய் பரிசு வழங்கி வந்த நிலையில் நாளை அவர் 50 ரூபாய் பரிசு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலால் திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.