மீண்டும் மருத்துவமனையில் கருணாநிதி….நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை….
மீண்டும் மருத்துவமனையில் கருணாநிதி….நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை….
உடல்நலக் குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்ற சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி, கடந்த அக்டோபர் மாதம் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 1 ம் தேதி அவர் ஒவ்வாமை மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 7-ம் தேதி திரு.கருணாநிதி வீடு திரும்பினார். தொடர்ந்து அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்,சளித் தொல்லை ,தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் திரு.கருணாநிதி, மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கு சிறப்பு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.