‘அரசியல் ஞானம் இல்லாத கீழ்தரமான பேச்சு’... உதயநிதியை வெளுத்து வாங்கிய கரு.நாகராஜன்...!
பாஜக மாநில பொதுசெயலாளர் கரு.நாகராஜன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் பற்றி புகார் மனு அளித்தார்.
கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி நான் குறுக்கு வழியில் வந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார். இதை யார் சொல்கிறார் என்று பாருங்கள். எத்தனை முக்கியத் தலைவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, குஜராத்தின் முதல்வரானார் மோடி என்பது உங்களுக்குத் தெரியுமா? என்னிடம் பட்டியலே இருக்கிறது'' என்று பேசிய உதயநிதி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட சில தலைவர்களின் பெயரைப் பட்டியலிட்டார்.
அதுபோதாது என்று அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய தலைவர்கள், மோடியின் சித்தராவதைக் காரணமாகத்தான் உயிரிழந்தனர் என பாஜகவின் மூத்த தலைவர்களின் மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார்கள் குவிந்து வருகின்றன.
பாஜக மாநில பொதுசெயலாளர் கரு.நாகராஜன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் பற்றி புகார் மனு அளித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி குறித்தும் அவதூறு கருத்துகளை பேசி வருதாகவும், அருண்ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் இறந்ததற்கு மோடி கொடுத்த அழுத்தமே காரணம் என உதயநிதி ஸ்டாலின் அவதூறு கருத்துகளை பேசினார், உதயநிதி ஸ்டாலின் கீழ்தரமாக பேசி வருவதாகவும், அரசியல் ஞானம் இல்லாமல் பேசியிருப்பது கண்டிக்கதக்கது என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு சுஸ்வா சுவராஜின் மகள் மற்றும் அருண் ஜேட்லியின் மகள் கண்டித்து டுவீட் செய்துள்ளனர் என்றும், உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதை ரத்து செய்யக்கோரி தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்ட போது 15 வாக்கு பதிவு இயந்திரங்களில் திமுகவிற்கு சாதகமாக இருந்ததால் அனைத்து வாக்குபதிவு இயந்திரங்களையும் சரிபார்க்க வேண்டுமெனவும் புகார் மனு அளித்ததாக தெரிவித்தார்.
ஸ்டாலின் மகள் மற்றும் மருமகன் இல்லத்தில் வருமானவரியினர் சோதனை குறித்து துரைமுருகன் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், துரைமுருகன் எப்போது நகைச்சுவையாக பேசக்கூடியவர் என்றும், அனைத்து கட்சி வேட்பாளர்கள் இல்லத்திலும் வருமான வரிதுறையினர் சோதனை மேற்கொள்ளபட்டு வருவதாகவும் பதிலளித்தார்.