karthic chithamparam got permisson to go foreign
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பண ஆதாயம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் பொருளாதார அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இவ்வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க கார்த்தி சிதம்பரம் முன் ஜாமின் கோரி இருந்தார். இதன் அடிப்படையில் ஜூலை பத்தாம் தேதிவரை அவரை கைது செய்ய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், வேலை காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மே மாதம் 19-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கார்த்தி சிதம்பரம் செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

இந்த பயணத்தை இதர நீதிமன்றங்களில் தடை உத்தரவு மற்றும் ஜாமீன் வாங்க பயன்படுத்த கூடாது. பயணம் முடிந்து தாய்நாடு திரும்பியதும் பாஸ்போர்ட்டை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ளது.
