தூங்கி வழியும் சித்து, பறிபோகுது கர்நாடகாவின் கெத்து: மீண்டும் முதல்வர் கனவை டர்ர்ர்ர் ஆக்கும் ‘கொர்’ விவகாரம்.
கர்நாடகாவின் பெரும் அரசியல் தலைவர்களுக்கும், தூக்கத்துக்கும் அப்படி என்னதான் தொடர்பிருக்கிறதோ தெரியவில்லை. பொது மேடையில் தூங்கி வழிந்து கடும் விமர்சனத்தை வாங்கிக் கட்டியிருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா!
மதசார்பற்ற ஜனதா தள தலைவரான தேவகவுடாவுக்கு ஒரு பெரிய பிரச்னை இருந்தது. அது பொது நிகழ்வுகளில் நேரம் காலம் பார்க்காமல் தூங்கிவிடுவது. அதிகாரத்தின் உச்சத்திலிருந்தபோது மிக முக்கிய மீட்டிங்கில் கூட இந்த பிரச்னையால் பெரும் அவதிப்பட்டார் கவுடா. அவரை விமர்சிக்க எதிர்கட்சிகள் வேறெந்தெ பாயிண்டையும் விட இந்த ஒரு விஷயத்தை மட்டும் வைத்தே கொலையாய் கொன்றெடுத்தன.
இந்நிலையில் இப்போது இந்த பிரச்னை கர்நாடக முதல்வராக இருக்கும் சித்தராமைய்யாவையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. மக்கள் நல திட்ட முகாம், மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை, காவல்துறை அதிகாரிகளின் பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் என எந்த முக்கியமான வேளையிலும் சித்தராமைய்யாவை இந்த தூக்க பிரச்னை போட்டு ஆட்டுகிறது. பிரஸ் மீட் சமயத்தில் மீடியா கேமெராமென் தங்கள் மைக்குகளை ரெடி செய்து தயாராகும் அந்த சின்ன இடைவெளியில் கூட குட்டி தூக்கம் போட்டுவிடுகிறார்.
இந்நிலையில் பெங்களூருவில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பிராந்திய விழாவிலும் மேடையின் நடு நாயகமாக அமர்ந்து உறங்கிவிட்டார் சித்து. முதல்வர் என்பதாலும், அயந்து உறங்குகிறார் என்பதாலும் யாரும் அவரை தொந்தரவு செய்யவில்லை. ஒரு கட்டத்தில் தானாக விழித்துக் கொண்டவர் அசடு வழியை முகத்தை துடைத்துக் கொண்டார்.
கர்நாடகாவில் பொது தேர்தல் பிரச்சாரம் களைகட்ட துவங்கிவிட்ட நிலையில் ‘இப்படி தூங்கி வழிபவரிடம் ஆட்சியை கொடுத்தால் மாநில வளர்ச்சியும் தூங்கித்தான் போகும். ஒரு முதல்வரே பொது மேடையில் தூங்கி வழிவதால் நம் மாநிலத்தின் மரியாதை அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.’ என்று எதிர்கட்சியான பி.ஜே.பி. பொளந்து கட்டுகிறது, காங்கிரஸிலுள்ள சித்தராமையாவின் பங்காளிகளோ ‘சித்துவுக்கு வயதாகிவிட்டது. உடல்நிலை ஒத்துழைப்பதில்லை. அதனால் இந்த முறை முதல்வர் வேட்பாளராக வேறு நபர்களை தலைமை தேர்ந்தெடுக்க வேண்டும்.’ என கொளுத்திப் போட்டுள்ளனர்.
தூக்கத்துல எமன் வரலாம், தூக்கமே எமனா மாறினா எப்பூடி?....