பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி
பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி நாளை சந்திக்க உள்ளதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் பரமேஸ்வரா பதவியேற்றுள்ளார்.
இலாக்காக்கள் ஒதுக்கீடு தொடர்பாக இன்னும் காங்கிரஸ்-மஜத இடையே இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக விவாதிக்க கர்நாடக மாநில காங்கிரஸார், நாளை டெல்லி செல்கின்றனர். இலாக்காக்கள் ஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஏற்கனவே டெல்லி சென்று சோனியா மற்றும் ராகுலுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நாளை காங்கிரஸார் செல்கின்றனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள குமாரசாமி, நாளை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்தியில் நான்காண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு என கூறப்படுகிறது. எனினும் காங்கிரஸுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைத்த குமாரசாமி, பிரதமர் மோடியை நேரில் சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரைத் தொடர்ந்து மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து, கர்நாடகாவில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்து குமாரசாமி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.